அழகு நிலா வாழ்க!
அழகு நிலா வாழ்க! – நெஞ்சை
அள்ளும் நிலா வாழ்க!
இளமை என்ற ஒளியி னால்என்
இதயம் வென்ற பருவ மங்கை
பழகு கின்ற பொழுது தந்த
பழர சத்தின் குளிர்மை மிஞ்ச –
அழகுநிலா வாழ்க! – நெஞ்சை
அள்ளும் நிலா வாழ்க
எழில் மயிலே ஆடு! – தோகை
இள மயிலே ஆடு!
தோகை யென்ற திரையின் மீது
தொக்கு வைத்து மரக தத்தை,
வாகை மன்னர் முன்னர் ஆடும்
வனிதை யென்ன அழகு மின்ன –
எழில்மயிலே ஆடு! – தோகை
இளமயிலே ஆடு!
தென்றலேநீ வீசு; சோலைத்
தென்றலேநீ வீசு!
ஊடி நின்ற கணிகை மாதர்
ஒப்ப நின்ற பூக்கு லத்தைக்
கூடி வந்து காதல் வாழ்வு
குலவு கின்ற உலகில் நின்று –
தென்றலேநீ வீசு! – சோலைத்
தென்றலேநீ வீசு!
மாங்குயிலே பாடு! – தளிராம்
மதுவையுண்டு பாடு!
மழலை மைந்தர் குழலை யாழை
மலரின் வண்டின் இனிய ஓசைக்
கழக மாகும் குரலினால்என்
கவிதை நெஞ்சம் உருகி வார –
மாங்குயிலே பாடு! – தளிராம்
மதுவை யுண்டு பாடு!
-நீலாவணன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home