Friday, August 15

அத்தான்

பொலியும் கலைமதியின் பெயரால் தனையறியார்
நலியும் மதி ஒளியில் நலமேதடி கண்டார்?
எலியின் உருவதிலும் எழில் காண் பவர் விழிகள்
மெலியும் நமதுடலை மேவா ததுமேனோ?

வாடும் கரமென்றே வளைசெய் ஒலிகேளா
தோடும் முகிலிடையே ஒழுகுங் கவியெனவே
தேடும் அவர் விழிகள்! தெரியா நமதுருவம்!
கூடும் தினமெண்ணிக் குலையா திருமனமே!

கோவைக் கவிதன்னைக் கொத்தும் கிளிகண்டே
நாவை நதியாக்கி நாவாய் விடுகின்றார்.
காவிற் கலைமானிற் காணும் நவமிந்தப்
பாவைக் கிலையென்றோ பாரா முகமானார்?

கடல்நா டிடு நதியின் கதையைக் கவிசெய்வார்
உடலோ டுயிர்மாய உளமே யவர்நினைவாய்
மடல்காய்ந் திடுதாழை மலரா யொருமங்கை
நடமா டுவதறியார் நமனா யினரவரே!

கண்ணிற் கருவண்டைக் காணார் மலர்மதுவை
உண்ணும் அவை கண்டால் உளமீந் திடுகின்றார்
எண்ணச் சுடுகாட்டில் எய்தும் சுகமிந்தப்
பெண்ணுக் கிலையென்றோ பேசாச் சிலையானார்!

கொத்தாய் மலர்சூடிக் குறையா அழகோடு
நித்தம் அவர் நினைவாய் நிற்கும் நமைவிட்டே
கத்தும் குயிலிசையிற் கவிதைக் கருதேடும்
அத்தா னொருபித்தன்! அழியா திருமனமே!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home