Friday, August 15

ஒட்டுறவு - சிறுகதை

‘நான் ரெண்டு மாசத்துக்கு முந்தியே சொல்லிப் போட்டன். கணக்கு முடியவந்து கூட்டித்துப் போயிருவன் எண்டு! பெட்டேய் அரியம்.. என்ன செய்யிறாய்? ஐயாட்ட அம்மாட்டச் சொல்லிப் போட்டு… கெதியா வெளிக்கிடு பாப்பம். இருட்ட முந்தி போய்ச்சேர வேணும்!’

என்றோ ஒரு நாள் சவடால்ற சாமித் தம்பி வந்து இப்படித் தான் செய்யப் போகிறான் என்பது ஏலவே தெரிந்த விஷயந்தான்! அது நடக்கப் போகிறது.

‘கௌரி.. இஞ்ச பாருங்க… அச்சாக் கௌரி! கண்ணக் காட்டுங்க.. இஞ்சப் பாருங்கவன் அக்கா… ஐயா.. ஐயா.. ஓடி வாருங்கவன். கௌரிக் குஞ்சு வடிவு காட்டுங்க… கோவங் காட்டுங்க.. கௌரி டாட்டா காட்டுங்க… ஆ…ஆ.. காட்டுங்க. வணக்கம் சொல்லுங்க.. சாமியக் கும்பிடுங்க… அரோகரா.. அப்பிடித்தான்.. நல்ல பிள்ள… அச்சாப் பிள்ள… முத்தல் பிள்ள…’

தகப்பனுடைய அதட்டலைக் கேட்டு குழந்தையை விறாந்தையில் விட்டு விட்டு அறைக்குள்ளே நுழைந்து ஊருக்குப் போக ஆயத்தமாகும் அரியத்தைப் பார்க்க வாய்விட்டு அழவேண்டும் போல இருக்கிறது.

அரியத்தைப் பெற்ற அப்பன் சவடால்ற சாமித்தம்பியை எனக்குப் பிடிக்காது. வருமானவரிப் பத்திரம் போல நேரம் காலமில்லாமல் அடிக்கடி வந்து நிற்கும் அவன் வரும் போதெல்லாம் ஏதாவதொரு சோக வரலாற்றோடு தான் வருவான். ஒரு நாளாவது ஒரு நல்ல சேதியோடு அவன் வந்ததில்லை.!

‘ஐயா கூரை எல்லாம் ஒழுகிச் சுவரும் கரையுது. எங்க விழுந்து தொலைஞ்சிருமோ எண்டு விடிய விடிய நித்திரையும் இல்ல. பெரிய அவதி.. ஐயா குந்தி இருக்கிற குடிலும் விழுந்து போச்செண்டால் குமரும் குட்டிகளுமாக எங்க போவன்… அதுதான் வந்த நான். ஒரு நாலுமாதக் காசு வேணும். அதுவும் காணாது! கிடுகு கட்ட வேணும் மாரி மழ காலம்… எனக்கும் பிளைப்புக் கிடைக்குதில்ல… பாத்துக் கழிச்சுக்கலாம்… உதவி செய்யுங்க ஐயா….’

‘ஒரேயொரு ஆம்பிளப் புள்ள. ஆறு பெட்டயளுக்குப் பிறகு ஆண்டவன் தந்தது. தோஷம் பிடிச்சுத் தளரா வியாதியாக் கிடந்தது. அதிர சீவன் ராவு முடிஞ்சு போச்சையா… சவம் அடக்கம் பண்ண வேணும்… என்னவெண்டாலும் பாத்துச் செய்யுங்க…’

‘மூணாம் பெட்டையும் ராவு சமைஞ்சு போனாள். அவளுக்குத் தண்ணி வாக்க வேணும். சதக் காசும் கையில கிடையாது. ஒரு இருபத்தைஞ்சு வேணுமய்யா.. பிறகு பாத்துக்கலாம். வீட்ட வெத்தில பாக்குக்கும் வழியில்ல…’

இப்படி எத்தனை எத்தனை! சாமித்தம்பிக்கு மாதத்தில் இரண்டு மூன்று விபத்துக்கள் குறையாது! தேவைகள் திருப்திகள் விபத்துக்கள் யாவும் உழைப்பவர்களுக்கு மட்டுந்தானா? அவை சவடால்ற சாமித் தம்பிக்கும் இருக்கத்தான் செய்தன.

‘ஐயா கதிர்காமம் போய் வரப் போறன்… காசு வேணும்! நான் சாகக் கிடந்த நேரத்தில வச்ச நேர்த்திக் கடன்… கட்டாயம் போக வேணும்!”

சாமித்தம்பியின் கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டும் போல் ஆத்திரம் வருகிறது. பொறுத்துக் கொண்டு ‘நீ கதிர்காமம் போகத்தான் வேணும் ஆனால் ஒரு பெட்டைக் குட்டி பாடுபட்ட பணத்தில் அல்ல. உன்னுடைய சொந்த உழைப்பில் போக வேணும். உதவாக்கரை உலக்கை! நீயும் ஒரு தகப்பனா?’

‘சோறு வேணும். வேட்டி வேணும். கூரைக்கு ஓலை வேணும். சாச் செலவும் சமைஞ்ச செலவும் வேணும்! சிவ மூலியும் வேணும்! கடைசியாக நீ கதிர்காம யாத்திரையும் போக வேணும்! இதற்கெல்லாம் நீ உழைக்க வேணும்!’

‘து}…! உனக்கு வெட்கமாக இல்லை? ஒரு பெட்டைக் குட்டியின் உழைப்பிலே… உன்னுடைய தேவைகளும் திருப்திகளும்… உதவாக்கரை… கேடு கெட்டவன்!’

‘ஒரு பெண் குழந்தை எத்தனைக்கென்று உனக்கு உழைத்துப் போடுவாள். இன்னும் எத்தனை காலத்திற்கு நீ அவளைக் கொண்டு உழைக்கலாம். நாளைக்கோ இன்றைக்கோ அவளும் பெரியவளாகி… வீட்டோடு வந்து குந்தி விட்டால்.. “நாலாம் பெட்டையும் சமைஞ்சு போச்சு” என்று யாரிடம் போய் ஒப்பாரி வைப்பாய்? நீ கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவன்! பிள்ளைகளை பாடுபட்டுழைத்துக் காப்பாற்றத்தான் முடியவில்லை! அந்தப் பெட்டைக்குட்டியின் உழைப்பிலே… கஞ்சாவும் புகைத்துக் கொண்டு கதிர்காம யாத்திரையும் போக வேண்டும். சீ!’ வாயைத் திறந்து இப்படியெல்லாம் பேசிவிட்டால் அவ்வளவு தான் சங்கதி. சாமித்தம்பி துண்டை உதறிப் போட்டுக் கொண்டு “அரியம் புறப்படு” என்று மகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டால்..? நான் ஒரு மாத முன் பணம் கொடுக்காவிட்டால் என்ன? இன்னொருவனைத் தேடிப் போய் ஆறுமாத முன்பணம் வாங்கவும் அவனால் முடியாதா என்ன? அரியம் போய்விட்டால்…. பழையபடி காவடி எடுக்க யாரால் முடியும்!

மனைவியும் நானும் அரசாங்க ஊழியம். அந்தப் பெரும் பேற்றினை அனுபவித்து பென்ஷன் என்ற ஜீவன் முத்தியடையும் வரை அரியம் போன்றவர்களை இழப்பது சாமான்யமான இழப்பா?

கடைசிக் குழந்தை உரித்த கோழிக் குஞ்சுபோல ஏழு மாதத்திலே உலகைக் காணத் துடித்துப் பிறந்து விட்ட முற்றல்! ஏழு மாதத்தையான் குஞ்சு கௌரிக்குத் துணையாக வந்தவள் தான் இந்த அரியம் என்ற அரியமலர்! ஒன்றரை வருடத்தில்… கௌரி குறைமாதக் குழந்தை போலவா இருக்கிறாள்!

‘ஆயோம்….! ஆயோம்….? ....!’

தாயின் மடியை விட்டுத் தன்னை விடுவித்துக் கொண்டு அரியத்திடம் ஓடிப் போகத் திமிறுகிறாள் கௌரி.

அரியம் புறப்படுகிறாள். தன்னுடைய உடைகளையெடுத்து கடதாசியில் சுற்றி வைத்து விட்டாள். தலையை வாரி பவுடரும் பூசியாயிற்று. கடைசியாக வாங்கிக் கொடுத்திருந்த அந்தப் புதிய சட்டையைக் கையில் வைத்துக் கொண்டு என்ன யோசிக்கிறாள்?

‘போட்டுக் கொள் உன்னுடைய சட்டை தானே!’

‘ஆயோம்… ஊக்கு ஆயோம்…!’

‘அரியம் ஊருக்குப் போகப் போறாள்… அவங்கட அப்பா அவளக் கூட்டிப் போகப் போறார். அரியம் இனி இல்ல. கௌரி அச்சாப் பிள்ள … அழக் கூடாது.’ குழந்தையைச் சமாதானம் செய்யும் மனைவியின் விழிகள் கௌரியை முகம் கழுவுவானேன்…!

‘அவளைக் கூட்டிக் கொண்டு போய் பட்டினி போட்டுக் கொல்லப் போறாய்.. என்ன?’

‘ஏனம்மா கொல்ல…? அதுகள் வயலுக்க போகும்.. கதிர் கப்பியைப் பொறுக்கும். கொண்டு வாறது தாராளமாகக் காணும். என்ட மனுஷியும் குமர்களும் வயல் வெளிய கிடந்து வாற நேரம்.. என்னவும் காச்சி வைக்க வேணும். எனக்கு அதுக்கும் ஏலாது…! இவள் பெட்ட வீட்டில நிண்டாள் எண்டால் அதுகளுக்கும் ஆறுதல்.. எனக்கும் நல்லம்.’

‘மூத்த பெட்டையிர புருஷனும் பேசுறான். அவன் கார் மெக்கானிக்கர். நல்ல உழைப்பாளி. வயது வந்த பிள்ளைய வீட்டு வேலைக்கும் விடுவானா ஒரு அப்பன்? எண்டு கேக்கான். அவன்ட பெண்டாட்டி அதுதான் எண்ட மூத்த மகள்.. அதுவும் ஒரே நோய்க்குடுகு! அவள் பெட்டைக்கும் உதவிக்கு ஆள் வேணும். நான் என்னம்மா செய்ய? ஒண்ணர வரிஷமாகுது… காணாதா?’

‘எனக்கு லீவு விட்டபிறகு நீ போனால் என்ன? இப்பவே போகப் போறியாடி அரியம்? இன்னும் ஐந்து நாள் பொறுத்துப் போக முடியாதா உனக்கு?’

வீட்டுக்காரியின்.. அதுதான் அரசாங்க ஊழியம் பார்க்கும் என் சகதர்மினியின் கேள்விகள் எதுவும் அரியத்திற்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அந்தக் கேள்விகள் தனக்குக் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. எங்கே தனது விடுதலை தாமதமாகி விடுமோ! பயம்…பரபரப்பு..!

ஆறு மாசங்களுக்குப் பிறகு…

நாளைக்கு.. தன் சிநேகிதிகளோடு புட்டி ஆற்றில் அரியம் நீந்தி நீந்திக் குளித்து விளையாடப் போகிறாள்!

சுழியோடி வந்து தண்ணீரில் நிமிர்ந்து நிற்கும் மலராத தாமரை மொட்டுகளை நிமிண்டி கசக்கி அழகு பார்க்கும் காவாலிப் பையன்களோடு, ஆபாசமாகத் திட்டிச் சண்டை பிடித்துக் கொண்டே, அரியமும் அவள் சிநேகிதிகளும் சந்தோஷமாகக் குளிப்பார்கள்! பிள்ளையார் கோவில் பின்புறம் வம்மி மரத் திரையில் மறைந்து, குளிக்கும் போது அணிந்திருந்த ஈரச்சட்டையைக் கழற்றிப் பிழிந்து விட்டு மீண்டும் ஈரத்தோடு அதனையே அணிந்து கொண்டு தலையை விரித்து விட்டபடியே தண்ணீர்க் குடத்தோடு வீடு திரும்புவாள் அவள்.

‘துறையடியிலே தான் எவ்வளவு புதினங்கள்!’

‘பகலெல்லாம் சனங்கள் போறதும் வாறதும்.. பார்த்துக் கொண்டிருந்தாலே பசிக்காது. கூத்தும் கும்மாளமும்…. வெறியும்!’

‘மாரியம்மன் சடங்கும் வருகுது. கோவிலடியில… எவ்வளவு பிள்ளையள். நிலவில வயல் வெளியெல்லாம் விடிய விடிய விளையாட்டு! சோறில்லாட்டி என்ன? ஒரு நாள் இல்லாட்டி இன்னொரு நாளைக்குக் கிடையாதா என்ன? அம்ம மோட்டு வட்டைக்குள்ள மூணு மாத்தயான் கதிர் பொறுக்கி வந்து, பச்சையாக்குத்திச் சோறாக்கி, குறட்டை மீனும் திராயும் சுண்டி, எல்லாரும் வளைச்சிருந்து ஆவிபறக்கப் பறக்க என்ன ருசியான சோறு… அது’

‘அரியம்… போய்ச் சாப்பிடு… நீ இனி இங்கே நிற்கமாட்டாய்… அது தெரிகிறது போ… முதலில் சாப்பிடு…’

குசினிக்குள் நுழைந்தவள் சாப்பிடுவதாக ஒரு பாசாங்கு. அவசரமாக வெளியே வருகிறாள்?

‘ஆயோம்… ஊக்கு… ஆயோம்!’ கௌரி கைகளைச் சிறகு விரிக்க ஓடி வந்து அவளை வாங்கிக் கொள்கிறாள் அரியம். இனி உன்னை விடமாட்டேன் என்பது போல அவளுடைய கைகள் அரியத்தின் கழுத்தைக் கட்டிக் கொள்ள சிரித்தபடியே குழந்தையை நிமிர்த்தி மாறி மாறி கன்னங்களில் கொஞ்சுகிறாள். குழந்தை சிரிக்கிறாள். அந்த அழகான சிரிப்பு நெஞ்சைப் பிழிகிறது.

முதன்முறையாக அரியம் வீட்டுக்கு வந்த அன்று தனக்கும் படிக்கத் தெரியும் என்பதை வாசல் மணலில் எழுதினாளே சா. அரியமலர் என்று. அவளுடைய பற்களைப் போலவே வரிசை பிசகாத அழகான கையெழுத்து. மூன்றாம் தரம் வேறு. அவளுடைய புத்திக் கூர்மை வேறு தான்.

ஓரிரு நாட்கள் போல இருக்கிறது. ஒன்றரை வருடங்கள் கௌரி அவளோடு ஒட்டிக் கொண்டாள். வேறு வழி?

குழந்தையின் அலுவல்கள்.. இரவில் தாயோடு உறங்குவது தவிர அனைத்தையும் அரியமே கவனித்தாள். பால் ஊட்டும் அவளே மருந்தையும் முறைப்படி ஊட்டுவாள். குளிப்பாட்டி அலங்கரிப்பாள். நானும் மனைவியும் உத்தியோகத்திற்கு கிளம்பிப் போய் திரும்பி வரும் வரை மட்டுமல்ல.. இரவு கௌரி து}ங்கும் வரை அவளுடைய காலில் படுத்து ஆடாவிட்டால் து}ங்க மாட்டாளே! குழந்தையின் முழுப்பொறுப்பையும் அரியமே ஏற்றுக் கொண்டாள். அத்தோடு..

ஏதோ சோறு சமைப்பாள்… கற்கள் கிடந்து விட்டால் கடவுளே என்பாள். உள்ளதைக் கொண்டு கறிகளும் சமாளிப்பாள். எங்களிடம் வரும் போது இவையெல்லாம் அவளுக்குப் புதிய பாடங்கள். பார்த்துப் படிக்க அவள் கெட்டிக்காரி.

இங்கு வரும் முன்பு அரியம் ஒரு டாக்டர் வீட்டில் இருந்தாள். எட்டு வயதிலேயே அவள் அங்கு போய்விட்டாள். குழந்தையைப் பராமரிக்கும் ஆயா ஒருத்திக்கு இவள் கையுதவிக்காக அமர்த்தப்பட்டாள். டாக்டர் ஐயாவும் மனைவியும் நல்லவர்கள் தான். இல்லாவிட்டால் இவளுக்கென்று தனியாகச் சாப்பாடு தயாரித்துக் கொள்ள இவளை அனுமதித்திருப்பார்களா! அவள் எங்களிடம் வரும் போது அவளுக்குப் பன்னிரண்டு வயது என்று யாருமே சொல்ல மாட்டார்கள். அவள் மிகவும் குச்சியாக இளைத்திருந்தாள். சுருளான அவள் கூந்தல் மொட்டையாக வெட்டி விடப்பட்டிருந்தது.

அரியத்திற்கு எங்களைப் பிடித்துவிட்டது. எங்களுக்கும் அவளை அப்படியே. கட்டையாய் வெட்டியிருந்த தனது தலைமயிரை சர்வ சுதந்திரமாக நீளமாக வளர்க்க ஆரம்பித்தாள். அவளுடைய தலையிற் பேன்கள் என் மனையாளின் பொழுதுபோக்கு! கொஞ்சம் வாய் நீளம் என்பதைத் தவிர... கடைக்குப் போனாள். மா இடித்தாள். வாசல் பெருக்கினாள். விறகும் கொத்தினாள். சமைத்தாள். குழந்தையை வளர்த்தாள். வீடும் வாசலும் அழகாய் இருந்தன. மாவும் முருங்கையும் எலுமிச்சையும் காய்த்தவை காய்த்தபடி கணக்காய் இருந்தன.

அரியத்தைப் பற்றி அடுத்த வீட்டுக்காரர்கள் எங்களிடம் கூறும் முறைப்பாடுகள். அவர்கள் அது இது கேட்டுவரும் வேளைகளில் அரியம் நடந்து கொள்ளும் கண்டிப்பின் கசப்புகள் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் வீட்டிலிருக்கும் பொழுதில் கூட எங்களுக்கான பதிலை அவளே சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைப்பாள். அவளுடைய துடுக்கான பதிலை எனக்குப் பிடிக்காவிட்டால் என்ன? வீட்டுக்காரிக்கு அது பிடிக்கும். ஒரு ஈ காக்கை நெருங்க முடியாது.

சில வேளைகளில் எங்கள் மூத்த பெண்பிள்ளைகள் இரண்டையும் அரியம் அடித்துவிடுவாள். காரணம் கேட்டால் ஏதோ சொல்லிச் சமாளித்து அழுவாள். இந்த இடத்தில் மட்டும் அவள் கொஞ்சம் அதிகம் என்று மனைவி அதட்டுவாள். மகளுக்கு மேலும் இரண்டு மூன்று தாயிடமிருந்து கிடைக்கும். ‘ஒத்த வயதுப் பிள்ளைகள். எப்படியும் போகட்டும். அக்கா தங்கை சண்டை போட்டுக் கொள்வதில்லையா?’ என்று இரகசியமாக மனைவியைச் சமாளிப்பது… ஒரு மெல்லிய செருமல் செருமிக் கொள்வது அவ்வளவோடு நான் சரி..

அவளிடம் திருட்டுப் புத்தி ஒன்றுமே கிடையாது. ஒர் சிறு உணவுப் பண்டத்தைத் தானும் அவள் திருடியதாக இல்லை. வாசலைப் பெருக்கும் போது ஏதாவது சில்லறைகளைப் பொறுக்கினால் கூட என்னிடமோ மனைவியிடமோ கொண்டு வந்து கொடுத்து விடுவாள்.

யாராவது எங்களோடு தகராறுகளுக்கு வந்தால்… அரியம் அவர்களைச் சும்மா விடமாட்டாள். எல்லாம் அவளுக்குத் தெரியும்.

‘கிழடன்! அவர்ர ஒசிலப்பாரன்….! கறிச்சட்டிப் புறத்தி மாதிரி முகமும் ஆளும்! ஐயாவோட இவனுக்குச் சரியான எரிச்சல்! தாலிக் கொடிக் கள்ளன்! இவனைப் பொலிசில் குடுத்து இடிப்பிக்க வேணும்! கண்ணாடிப் புடையன்!’

வாய்க்கு வந்தபடி திட்டுவாள். காறாப்பித் துப்புவாள்! எட்டிப் பார்த்தால் தெருவிலே எங்களோடு வயல் வழக்காடிக் கொண்டிருக்கும். மனைவியின் உறவினர் போய்க் கொண்டிருப்பார். அவருக்கு கேட்காமல்தான் இது நடக்கும். நான் அதட்டிக் கூப்பிடும் வரையும் நடக்கும். இப்படிப் பலபேர் அரியத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள்.

‘இவளுக்கு இனிமேல் செண்ட நாள் செல்லாது பிள்ள. இண்டைக்கு நாளைக்குச் சமைஞ்சு போவாள் பெட்ட. ஆளப்பார்! திமுக்குத் திமுக்கெண்டு! குமருகள் மாதிரி நல்ல கொழுப்பு வச்சித்து. இவள்ற நெஞ்சையும் நெளிப்பையும் பாரன்.!?’

பக்கத்து வீட்டுக்காரி அரியத்தைப் பற்றி இப்படி சொன்னால்… நல்ல பரிசு கிடைக்கும்.

கிழவியைப் பார்த்து உதட்டை மடித்து ‘வவ்வவ்வே.. உனக்கென்ன கிழடி! நீ உன்ட வேலயப் பார்! அவக்கு கோப்பித்து}ள் குடுத்தாத்தான் நல்லம்… இல்லையெண்டால் எரிச்சல்!’

கிழவிக்கு அசடு வழிய அதை மனைவி துடைக்க நான் சாடையாகச் செரும அத்தோடு முடியும் அது.

கிழவி சொன்னது சரிதான். இனிமேல் சென்ற நாள் செல்லாது. அரியம் சமையப் போகிறாள். அவள் பெரிய மனுஷியாகப் போவதை எண்ணிக் கிழவியும் நாங்களும் ஏன் வருத்தப்பட்டுக் கொள்ளவேண்டுமோ? சந்தோஷப்படவும் முடியவில்லை. சமைந்ததும் அவளை அழைத்துப் போய் விடுவான் சாமித்தம்பி. அவள் போய் விட்டால்… உத்தியோகம்.. குழந்தை.. வீடு..? இன்னொருத்தியைத் தேடி பழையபடியே காவடி…

‘கௌரி… டாட்டா… காட்டுங்க டாட்டா’ குழந்தைக்கு விளங்கி விட்டது? அரியத்தை இறுகப் பற்றுகிறாள்… சிணுங்கல் சிக்கி சிக்கி வெளி வருகிறது.

‘எங்கட பிள்ள நல்ல கௌரிக் குஞ்சு - ராசாத்தி… ஆயோம் போயிற்று வாறன் ஆ.. குளப்படி பண்ணாமல் அச்சாப் பிள்ளையா இருக்க வேணும்… சரியோ.. எங்க பாப்பம்… டாட்டா காட்டுங்க… வணக்கம் காட்டுங்க…?’

‘ஆ… ஆ… போதும் புறப்படு… பொழுது போகுது!’ சாமித்தம்பி அரியத்தை துரிதப்படுத்துகிறான்.

‘அரியம் சட்டையெல்லாம் எடுத்துக் கொள். சம்பளக்காசு பாக்கி கிடையாது! நீ பெரியவளான பிறகு தான் போவாய் என்று நினைச்சம். அதுக்குள்ள உன்ர அக்காட புருஷன் மெக்கானிக்கருக்கு மானம் போகுதாம். அதுக்கென்ன நீ போகத்தானே வேணும். ஆனால் இப்படித் திடுதிப்பென்று உன்ர அப்பன் செய்வான் என்று நாங்கள் நம்பியிருக்கல்ல…. கௌரிக்குத் தான் துணை இல்ல.. அவள் ஏங்கிப் போவாள்… ஆயோம்.. ஆயோம்… என்று உன்னத் தேடுவாள்! சரி சரி நீங்க கௌரியை அரியத்திடம் வாங்கி எடுங்க…?’

இதற்கு மேல் மனைவியால் பேசமுடியவில்லை.. அரியத்தைக் கட்டிக் கட்டிப் பிடிக்கும் கௌரியை வலுவில் பறித்தெடுக்கிறேன். அதைப் பார்த்து அவள் விம்முகிறாள். அதைப் பார்த்த நான்…?

கௌரியைத் தேற்றிக் கொண்டே அறைக்குள் போகிறேன். அறையில் மூசு;சு முட்டுகிறது. சட்டைப் பையுள் நுழைந்த கை வெளியேற விறாந்தைக்கு விரைகிறேன்.

கையில் பார்சலோடு தகப்பன் அருகில் விடை பெறக் காத்து நிற்கிறாள் அரியம். குழந்தை ஆயோம் என்று கூப்பிட்டுக் கொண்டே அவளிடம் தாவத் துடிக்கிறாள். இப்பொழுது அரியம் கௌரியை என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளவில்லை. மனைவியிடம் அவளைக் கொடுத்துவிட்டு…

‘அரியம் இதை வைத்துக் கொள். சந்தோஷமாகப் போய்வா! நீ நல்லபடியாக வாழ வேண்டும். கௌரிக்கும் எங்களுக்கும் நல்ல துணையாக இருந்தாய்….! இனிமேல் கௌரி புதிய துணை தேட வேண்டும்… அவள் ஏங்கிப் போவாளே…!’ மேலும் பேச முடியவில்லை. நிலையில் சாய்ந்த படியே கண்ணீர் பெருக்கும் மனைவி. அவளைப் பார்த்து விம்மும் குழந்தைகள். இடையில் அவர்களுக்கு ஒத்தாக நான்….

அரியத்தின் முகத்தில் எவ்வித உணர்வும் இல்லை. அவள் கண்களிலும் கலக்கம் கிடையாது. அசைவற்று நிச்சலனமாக நின்ற அவள் தாயிடம் இருந்து குழந்தையை அணைத்து கடைசியாகக் கொஞ்சுகிறாள்.

‘கௌரிக் குஞ்சு இஞ்சப் பாருங்க.. வடிவு காட்டுங்க… கவனம்! கோவங் காட்டுங்க.. அச்சாப்பிள்ள! டாட்டா.. வணக்கம்..! ஆயத்துக்கு டாட்டா காட்டுங்க… காட்ட மாட்டீங்களா…?’

…………………………………………………………..
திமிறி அழும் கௌரியை மார்போடு அணைத்தபடி விக்கி விக்கி அழுகிறாள் மனைவி.

சாமித்தம்பி வாசலில் இறங்கி நடக்கிறான்.

‘கௌரி டாட்டா… டாட்டா…’ சிரித்தபடியே கைகளை அசைத்து அரியம் கௌரியிடம் விடை பெற்றுக் கொள்கிறாள்!

‘ஐயா.. போயித்து வாறன் ஆ…’

‘நளினி.. வினு… ஊஜ்ஜி… எல்லாருக்கும் போயித்து வாறன்…ஆ…’

ஒரு ஞானியைப் போல எவ்வித நெஞ்ச நெகிழ்வும் இல்லாமல் அரியம் எங்களிடம் விடை பெறுகிறாள். வாங்கிய பணத்துக்கு அவள் கடமை முடிகிறது. பணத்திற்காகத்தான் அவள் எங்களோடு ஒட்டி இருந்தாளா? அதற்கு மேல்….. அந்தப் பணத்திற்கு மேல் இந்த உலகில் வேறு ஒன்றுமே இல்லையா?

தனது பிஞ்சுக் கரங்களை அசைத்து அசைத்து ‘ஆயோம்… ஆயோம்’ என்று கௌரி அரியத்தைக் கூப்பிடுகிறாள். திரும்பிப் பார்த்து கைகளை ஆட்டிச் சிரித்தபடியே தெருவில் இறங்கிய அரியம் - அந்த இளவரசி தன் ஊரை நோக்கி - தனது விதியை நிச்சயித்தவளாக, உறுதியாக நடந்து அவள் அப்பனைப் பின் தொடர்கிறாள்.

அரியம். அவள் போகவேண்டியவள்தான் என்பதை இன்னும் சில நாட்களில் கௌரியும் தெரிந்துகொள்வாள். அதுவரை..?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home