Tuesday, August 12

வெள்ளையா நான் வளர்த்த வீரா..!

வெள்ளையா நான் வளர்த்த வீரா....
எனதன்பின்
பிள்ளையே, இன்று
பிரிந்தாய் எனைவிட்டு!
நல்ல சுகமாய் நடந்தாய்...
பகல் வாசல்
மல்லிகையின் கீழே
மடுக்கிண்டிக் கொண்டதற்குள்
காலை மடக்கி,
கவட்டுக்குள் உன்னுடைய
வாலைச் சுருட்டி
வடிவாய்ப் படுத்திருந்தாய்!
வாசல்கிண்டும் உன்றன்
வழக்கம் பிழையென்று
ஏசியுள்ளேன் எத்தனைநாள்...
என்றாலும் மன்னிப்பாய்!
கோடிப் புறத்தில் குரக்கன் பயிருக்குள்
ஓடிப் புரண்டாய்...
ஒருவாய் அதில் கடித்தாய்...
பார்த்துநின்ற என் இளைய
பையன் உனை மரணம்
பூர்த்த விதத்தை
புகன்ற விதம் என்நெஞ்சை
பேர்த்தெறியச்
சோற்றைப் பிடித்த படி
வேர்த்தேன்... வெயிலுக்குள்
வெள்ளையன் நீ மல்லாந்து
சாய்ந்து கிடந்தாய்!
சலனம் இலைச் சவம்நீ!

ஆய்ந்தால்... நினது
அரிய குணங்களெலாம்
தோன்றி, மனது
துடிக்குதடா வெள்ளையா!

நீண்டு தொங்கும் உன்றன்
நெடிய செவியழகும்
கொட்டன்வால் வெண்பஞ்சின்
குப்பை மயிரழகும்
கட்டையாய் வாய்ந்துவிட்ட
கால் நான்கும்... எல்லாம்
பயனற்று போய்க் கிடத்தல்
பார்த்தேன் நான் பார்த்தேன்
பயணம் போய் விட்டாய்...
பகலுணவு பண்ணுமுன்பே!
காத்திருந்து வந்த
கவிதை சுரப்பெடுக்க
வார்த்தைகளில் தோய்ந்து
வசப்பட்டு நிற்கையிலே
உப்புப் புளி அரிசி
ஊர்க்கருமம் காரியங்கள்
செப்பிச் சினந்தெனது
சிந்தனையைத் துண்டாடும்!

அற்ப செயல்கள்
அறியாய் ஒருநாளும்...!
நெற்பயிரை மாடு
வயிறு நிறைக்கையிலும்
பூக்கன்றை நக்கும் பொழுதும்...
துரத்தாது
தூக்கத்தில் மண்ணுக்குள்
தோண்டிப் படுத்திருப்பாய்!
அப்பொழுதுன் மேல் எனக்கு
ஆத்திரமாய் வந்ததுண்மை
துப்பாக்கி தூக்கித்
துரத்தியதும் உண்மைதான்!
வீட்டுக்குக்கு காவல் இருப்பவன் நீ...
அங்குவரும்
மாட்டை துரத்தி
மறித்தல் கடனென்றும்
ஊட்டுதற்கே அப்படியும்
உன்னைப் பயமுறுத்திக்
காட்டினேன் உன்மேல்
கருணையின்றிச் செய்யவில்லை

நாய்க்குலத்தில் நீபிறந்தாய்...
நல்லதம்பி உன்னவர் பெண்
நாய்க்குப் பின் னோடி
நடுத்தெருவில் நின்றுகொண்டு
ஆளையாள் காமக்
குரோதத்தால் கொல்வதற்காய்
வாலை, முகத்தை,
வயிற்றைக் கடிப்பது போல்
வெள்ளையா நீ எதுவும்
வெட்கமுள்ள காரியங்கள்
உள்ளி அறியாய் நீ
உத்தமனே! பக்கத்து
வீட்டில் கிடக்கின்ற
வீரனோடு வெண்ணிலவுக்
காட்டில் பிடித்துக்
கடித்து வளவெங்கும்
ஓடிப் பிடித்து ஒளித்துவிளை யாடுவதும்
வேடிக்கை பார்த்த விநோதன்
தடியெடுத்துப்
போட்டால் முதுகில்,
புறவளவில் போய்ப் படுத்து
வீட்டுக்குப் பின்சுற்றி
வேலிக்குள் ளால் நுழைந்து
வாலாட்டிக் கொண்டே
வருவாய் வழக்கம் போல்!

காலெல்லாம் வெள்ளைமயிர்க்
காடு சொறிவந்து
பின்கால் சதை தெரியப்
பெற்றாய்; தக்காளியைப் போல்!
கண்டோர் அருவருத்தார்....
காணத் தகாததிதைக்
கொன்று விடும்படியும்
கூறினார் சிற்சிலபேர்
என்றதற்காய்... உன்னை யான்
ஏசித் துரத்தவிலை
தேங்காயை நீ திருடித் தின்றதுவாய்...
என்மனைவி
"ஏன்கொணர்ந்தீர் இச்சனியை"
என்று முறைப் பாடுசொல்லும்
போதில் உனைநான்
புறுபுறுத்த தெல்லாம் பொய்!

ஏது நடந்து இறந்தாய் என அறியேன்!
கோடிப்புறத்தில் மடுவெட்டி கொண்டுன்னை
சோடினைகள் மேளம்...
வரிசையெதும் இன்றியே
மண்போடும் போதில்
மனது கனப்பெடுத்த
கண்ணீரே இந்தக் கவி.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home