வேனில்
ஆண்டில் ஒருமுறை எம்
மாண்ட பிதிர்கடனை
வேண்ட வரும் குருக்கள் போலே
கிளை
நீண்டு வளர்ந்து பச்சை
பூண்டு புதுத்தளிர்கள்
தோன்றும் மரங்களுக்கு மேலே
உயர்
பாண்டி மாநகர்
தோண்டி எடுத்த தமிழ்
ஈண்டு குயிலிரைக்கும், தேனே!
அது
தீண்ட எனதுளமும்
தாண்டும் கவலைகளை
மீண்டும் கவிதைவெறி யானேன்!
முள்ளு முருக்கில் எரி
கொள்ளி நெருப்புதிர்ந்து
தள்ளி கிடக்குமோர்மாந் தோப்பை
வான்
வெள்ளி குலைகுலையாய்
அள்ளி எறிந்தது போல்
கொள்ளை கொளுத்துது மத் தாப்பை!
புள்ளும் குருவிகளும்
உள்ளம் கனிந்த காதல்
வெள்ளம் தனில் குடைந்தே ஆடும்!
புதுக்
கள்ளில் எழும் “தெறி” போல்
துள்ளும் சுவைக்கவிதை
சொல்லி வசந்த மிதைப் பாடும்!
செல்வம் படைத்தவர்க்கே
ஒல்கும் பணிவிதென்று
நெல்லின் கதிர்கள்தலை தாழ்த்தும்
மிக
மெல்ல நடந்துவரும்
செல்வக் குழந்தை இளம்
தென்றல் அவைநிலத்தில் வீழ்த்தும்!
சுவை
வெல்லத் தமிழ் கதைத்து
செல்லும் கிளிக்குலமும்
வேனில் விளங்கவென வாழ்த்தும்
இதை
நல்லகவிதை யொன்று
சொல்லும் படிக்கெனை எந்
நாளும் கனவிடையே ஆழ்த்தும்!
சன்னல் அருகுநின்று
என்னே அழகிதென்று
கண்ணைப் பிசைந்து கொண்டு பார்த்தால்
அவள்
என்னோ டெழுந்து வந்தென்
முன்னால் அணைந்து நின்று
தன்மேல் எனதுடலைப் போர்த்தாள்
எழில்
மின்னும் வசந்தமன்பு
பண்ண இயற்கை தந்த
வன்னப் பொழு தெனவே சாய்ந்தாள்
அவள்
கன்னம் சிவக்க இதழ்
தன்னைப் பதிக்கையிலே
விண் ஏன் இடையில் வந்து பாய்ந்தாள்?
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home