Friday, August 15

பாய்விரித்து வையுங்கள்

பறையின்மகள் தூங்குகிற
அறைக்கதவை நள்ளிரவில்
பதுங்கிச் சென்று
குறைமதியால் மதுவெறியால்
தட்டுகிற கோமான்காள்
கொஞ்சம் நில்லீர்!
நிறையுடையாள் பொன்றாத
கற்பெனும் நிதியுடையாள்
நெஞ்சை ஈர்த்தால்
முறையாக மணப்பதிலே
வசையென்ன? ஏறிடுமோ
முதுகில் மேளம்!

முடிச்சவிழ்க்கப் போம்பொழுதும்
முதலாளி போலுடலை
முறையாய் மூடி
நடித்துலகை ஏய்ப்பதற்கும்
நாகரிக உடைவேண்டும்!
அவற்றைக் கல்லில்
அடித்தும்மை அழகுசெய்யும்
அந்த “வண்ணத்” தோழனுங்கள்
அருகில் வந்தால்
துடிக்கின்றீர் ஏனையா?
சொல்லுங்கள் தொங்கிடுமோ
தோளில் மூட்டை!

குரங்குக்கும் உங்களுக்கும்
கொஞ்சமெனும் உறவில்லை?
குறித்துக் காட்ட
சிரங்கொட்டும் நும்தலையில்
சீழ்கொட்டும் போதுமதைச்
சிங்கா ரிக்க
கரந்தொட்டே கத்தியினால்
“கருக்” கென்று மயிர்சீவிக்
காட்டு வாழ்வுக் (கு)
இரங்குகின்ற “அம்” பட்டன்
ஈனனென்று செப்புகிறீர்
இதுவோ நீதி?

களிப்புக்கும் உள்ளாழ்ந்த
கவலைக்கும் மருந்தென்று
கலத்தை நீட்டி
புளிப்புக்கும் இனிப்புக்கும்
போராட்டம் போடுகிறீர்
பொழுது பட்டால்!
சுளிக்கின்றீர் ஏதோதோ
சுடுசொற்கள் வீசுகிறீர்
சொந்த நண்பன்
குளிக்கவரின் பொதுக்கிணற்றில்
"பள்”ளென்று கூவுவதோ
கொடுமை ராசா!

கோயிலையும் ஹோட்டலையும்
“கொள்கையெனப் பேசிடுவோர்
கூடிச் சென்று
வாயிலினைத் திறப்பதினால்
வந்திடுமோ ஒன்றுகுலம்?
வளர்ந்து விட்ட
நோயிதனை நொருக்கிவிட
நோக்குடையீர் எனிலுங்கள்
நொண்டி நெஞ்சில்
பாய்விரித்து வையுங்கள்
பகுத்தறிவு நல்லெண்ணம்படுத்துத் தூங்க!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home