மழை பொழிந்தது
மழை பொழிந்தது, மழை பொழிந்தது!
மண் மடந்தையின் மனங் கசிந்தது!
மலையிருந்து பல் நதி விரைந்திட,
மரஞ்செடி கொடி மகிழ்ந்து கும்பிட
மழை பொழிந்தது, மழை பொழிந்தது!
மண் மடந்தையின் மனங் கசிந்தது!
கருணை வானக் கரம் வழங்கிய
கனிந்த நாவற் பழஞ் சொரிந்தென,
பரந்த பூமிச் சருகதிர்ந்திடப்
படபடபட சடசடவென…
மழை பொழிந்தது, மழை பொழிந்தது!
மண் மடந்தையின் மனங் கசிந்தது!
தாளங் கொட்டித், தவளைத் தட்டார்
தங்க மின்கொடித் தாலி செய்திட,
ஆழமான குளம் வழிந்திட,
அடியடியென விடியவிடிய….
மழை பொழிந்தது, மழை பொழிந்தது!
மண் மடந்தையின் மனங் கசிந்தது!
கலையிழந்து தம் கணவர் நெஞ்சிடை
காதல் வஞ்சியர் கூதல் அஞ்சிட,
மலை பிளந்தென இடிமுழங்கிட,
மை யிருளிடை பொய்யெனப் பெரு….
மழை பொழிந்தது, மழை பொழிந்தது!
மண் மடந்தையின் மனங் கசிந்தது!
இடரெனும் புவிக் கடலில், உண்மை யென்
இரவி யள்ளிய கருமுகில் மனத்
திடைப் புகுந் துணர் வறுத்த செந்தமிழ்
உடைப் பெடுத்தொரு படைப் புதித்தென
மழை பொழிந்தது, மழை பொழிந்தது!
மண் மடந்தையின் மனங் கசிந்தது!
(வழி" தொகுதியிலிருந்து...)
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home