கண்டக்டர் அண்ணனுக்கு..
சில்லறை இல்லையென்ற
பல்லவியைச் சொல்லியே
இல்லாத ஏழை இளித்தவாய் மக்களிடம்
சல்லி கறக்கின்ற சங்கதியை ஓரளவு
கல்வியறிவுள்ள கனவான்கள் தம்மிடத்தும்
காட்டிப் பிடிபட்ட கண்டக்டர் ஐயாவே!
"மிச்சம்தா" என்றால் மிரட்டுகிறீர்
" ஐந்து சதப்
பிச்சைக்காசுக்காய் ஏன்
பின்னால் திரிகின்றாய்.
ஐம்பதா நூறா நீர்
என்னிடத்தில் தந்ததொகை" என்பீர்!
பணம் கேட்கும் இன்னொருவர் தம்மிடமும்
"ஐந்து ரூபாய் தாளுக்காய் ஆலாய்ப்பறக்கின்றீர்
இந்தாரும்" என்று எறிவீர்
"எடும் டிக்கெட் சில்லறையை! இல்லை,
இறங்கும் இதில்"என்பீர்
எல்லோரிடமும் இவைகள் பலிக்குமா?
வசுக்கள் எமது
வரிப்பணத்தில் வாங்கியவை
வசுவை நடத்துனர் நீ வாங்குகிற சம்பளமும்
எங்கள் பணமே.
எசமானர் மக்களையா.
பைநிறையச் சில்றையை
பத்திரமாய் வைத்துவிட்டு
கைவிரித்துக் காட்டி இறக்கிவிட்டு,
கந்தோரில்
காசுகட்டிவிட்டுத் திரும்புகையில்
கைபோட்டுப் பையிலுள்ள
காசை யெடுத்தெண்ணிக்
கடையில் கொடுத்துத்
தாளாக்கிக் கொள்ளுகிற
தந்திரத்தை மக்களெல்லாம்
தூளாக்குவார்கள் துணிந்து.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home