Friday, August 15

குமையும் குயில்

தோடம் பழச்சுளைபோல் தொங்கும் நிலவொளியில்,
ஆட வருவாயென்று, ஆற்றோரம்
ஓடத்தே
நான்காத் திருந்தேன் நடுச்சாம மாகுமட்டும்,
ஏன்காக்க வைத்தாய் எனை?

எண்ணத்தில் எல்லாம் எலுமிச்சைப் பூச்சிரிப்பே
கண்ணிறையக் காணுவதுன் கட்டழகே,
எண்ணில்லா
வெள்ளிகளின் மத்தியிலே, வீற்றிருக்கும் வெண்ணிலவை
எள்ளி நகைக்கும் எழில்.

வெண்டா மரைக்குள்ளே வீழ்ந்துருளும் நீலநிற
வண்டாய், விழியாலிவ் வானத்தைக்
கண்டாலே
என்னை நினைக்கா திருக்க இசைவாயோ?
என்னே இதயம் இரும்பு!

தக்காளிக் கன்னங்கள் மிக்க சிவப்பேறப்
பக்கத் திருந்திசை நீ பாடுங்கால்…
துக்கமுற்று
சித்தம் குழம்பிச் செயலிழந்து மாமரத்தின்
கொத்துள் குமையும் குயில்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home