Friday, August 15

வெறிக்குது

தங்க நிலாவான் தவழ்ந்து வருகுது – அதில்
தாவியே ஏறிட ஆசை பெருகுது!
மங்கை உன் அன்பிலென் மனம் உருகுது – தீயில்
மாந்தளிர் போலவே உடல் கருகுது!

முல்லையில் வண்டினம் மொய்த்துக் கிடக்குது – அந்த
மோகக்கிறுக்கிலே ராகம் பிறக்குது!
கொல்லையில் குளிர் தென்றல் நடக்குது – அடி
கோதை உனைக் கொஞ்ச உள்ளந் துடிக்குது

‘அத்தான்’ என்றொரு தத்தை அழைக்குது – ‘வா
அன்பே’ என்றதன் சோடி அணைக்குது!
ஒத்திய முத்தமோ பித்தம் விளைக்குது – பாவி!
உன்நினை வாற்செயல் யாவும் பிழைக்குது

நுரைக்கனி யின்விதை நுங்கிற் சுழலுது – அந்த
நோக்கிலே என்நெஞ்சு நோயில் உழலுது!
வரைக்குமேல் அதோ மதியம் தெரியுது – நீ
வராதி ருந்திடில் தேகம் எரியுது!

வில்வக் கனிவந்துன் நெஞ்சில் இருந்தது – விழி
வேல்பட்ட புண்ணுக்கு வேண்டும் மருந்தது!
புல்லி அணைத்திடில் மார்பின் விருந்தது – அதை
பூங்கொடி போல் இடைதாங்கி வருந்துது!

வன்ன இதழ் எனதெண்ணம் பறிக்குது – அனல்
வாகை மலரதன் வண்ணம் குறிக்குது
கன்னலின் சாறென இனிமை செறிக்குது – பழங்
கள்ளை அருந்திய தென்ன வெறிக்குது!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home