Friday, August 15

போகிறேன் என்றோ சொன்னாய்?

மண்ணிடை இரவுக் கன்னியின் ஆட்சி
இன்னும் தேயவில்லை - இளம்
தென்னையின் ஓலை பண்ணிய இன்பப்
பாட்டுக்கள் ஓயவில்லை
என்கடை வாயில் உன்னிதழ் ஊட்டிய
ஈரம் காயவில்லை – எழில்
மின்னிடும் என்றன் மென்முலை தானும்
பின்னே சாயவிலை!

குறுமணல் மீது கொண்டல் தவழ்ந்த
சுவடும் மாறவிலை – அங்கு
புறவுகள் வந்து குறுநடை கொண்டு
கோலம் கீறவிலை
இரவின் ‘அம்மிக் குருவி’கள் இன்னும்
இல்லம் சேரவிலை – என்னை
இடைவெளி யின்றி இறுக அணைத்த
இதமும் தூரவில்லை!

பருவப் பெண்ணாம் இரவுக் கன்னி
தவறிப் பெற்றபயல் - அந்தப்
பரிதிக் குஞ்சைக் ககனத் தெருவின்
முடிவில் போட, அவன்
உருவப் பொலிவின் உதயத் தொளியில்
உறவை வெட்டுகிறாய் - பொல்லா
உதிரக் கடலின் நடுவில் படகில்
நடையைக் கட்டுகிறாய்!

“விண்ணின் தாரை எண்ணிப் பொழுதை
வீணாக் கிடவல்ல – அணு
விஞ்ஞா னிகள்போல் மண்மேல் உயிர்கள்
நீறாக் கிடவல்ல!
உண்ணீர் என்றே மீன்கொடு வந்திவ்
வுண்ணா உலகத்தின் - பசி
ஓட்டப் போகின் றேனென் றோசொன்னாய்”
என் உயிரத்தான்!

வேம்புக் குமரி தென்றல் காற்றின்
வெறியைச் சாடுகிறாள் - அந்த
வீம்புக் காரன் விரகப் பேயோ
டவளைக் கூடுகிறான்!
தேம்பிக் கொண்டே ஆடையை அள்ளி
மார்பை மூடுகிறாள் - உன்னைத்
தேடித் தேடி ஆழிக் கரையில்
ஒருபெண் வாடுகிறாள்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home