Friday, August 1

பிறப்பு

பச்சைப் பசுந்தமிழில் பாடுவதும்
நம்குழவி
கொச்சை மழலை குழைவதினும்
பிச்சையிட்டு
ஆண்டான் அடிமையினை
அட்டியின்றித் திட்டுதலும்
வேண்டும்!
தமிழாயின் வேண்டுமடா!
கூண்டினிலே
பொல்லாச் சிறுத்தை
பொறைஇழந்து சீறிடவும் இல்லை;
அதற்கிவ்
இனியகுரல் இல்லை இல்லை!
ஆரோ ஒரு பெண்!
அவளுக்கிந் நேரத்தே
நேராக் குறையென்ன நேர்ந்ததுவோ?
போராட்டம்
தான்! எனினும் அன்னாள்
தமிழில் அழுகின்றாள்!
ஏன் என் றறிதல் இழுக்கல்ல
என் மான்பிணித்த
கையை விலக்கி
இரு காதுகளைத் தீட்டிவிட்டுப்
பைய எழுந்து
பலகணியின் மெய்தழுவி
நின்றேன்; அதுபொழுது
நீல நெடுவானில்
நின்ற இளநிலவும்
நீந்தியெங்கோ சென்றிருந்தான்
தோய்ந்த இருளின்
தொலைவில் நடப்பதனை
ஆய்ந்தறியக் கண்களினால்
ஆகவிலைத்
தேய்ந்த ஒலி
விக்கல், முனகல்,
விதியென்ற கூப்பாடெத்
“திக்” கென்ன யானும்
திரும்பிடவும் பக்கத்தே
பல்லென்று வெண்சம்பாப்
பாற்சோ(று) அடுக்கியவள்
சொல்கிறாள்; தாய்மை சுரப்பெடுக்க!
“வல், விரைவில்
பெண்மைச் சிகரத்தின் பேறாக
ஓர் அழகின் கண்மணியைச், செய்ய
கதிர்மகனைத் தன்மடியில்
தாங்கக் கடல் அன்னை
தன்னை மறந்தங்கு
ஏங்குவதும் உங்கட் கினிப்பாமோ?
நாங்களுண்டு!
அப்பால் நகர்ந்திடுக ஆண்குலமே!
நும்செயலே
இப்பாவை சோகம்!
இனிமேலும் எப்படியும்
வாழ்க உமக்கிங்கு
வாய்ந்த நலம் யாவும்!
கீழ் வானில் மேகக்
கிழியலினுள்
தாழ்வில் பவள மணியென்னப்
பாலன் ஒருவன்
அவதரிக்கப் போகின்றான்
ஆமாம்!அவதிகண்டு
வாயின் கழிவிரக்க
வாந்தியினால் தாயடைந்த
நோயின் கொடுமை
நொடித்திடுமோ? போயிடுக!
கண்டால் உமைத்தாய்மை
கண்ணீர் பெருக்கிடுவாள்!
கொண்டாட வாம்
அக் குழவிவந்த பின்பாடு”
என்றென்னை எள்ளி
இதழ்க்கடையிற் பூத்த நகை
கொன்றாள்!முகமதியம்
குங்குமமாய்த் தின்றதெனை
அக்கணத்தே கொம்பிருந்த
ஆண்கோழி ஒன்றெழுந்து
“கொக்கரக்கோ” என்றேதோ
கூவிற்றே
செக்கர்வான்கம்பளத்துட்
பிள்ளைக் கனியமுதம் சிந்திற்றே!
நம்பினால் நம்புங்கள்
நம்மூரின் கம்பனுக்கும்
ஆகாதே அந்த
அழகை வியந்துரைக்க!
பாகாய் உருகிற்றென் பாவுள்ளம்
ஆஹா - ஹா!
விண்ணோடு மன் ஆன
விரிகதிரை ஈன்ற
பெண்ணால் உலகெய்தும் பேறு!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home