Monday, August 18

உறவு

மரணித்துப்போன எங்கள்
மானாகப் போடிப்
பெரியப்பா..
நீர் ஓர் பெரிய மனிதர் தான்!

பெட்டி இழைத்தும்
பிரம்பு பின்னல் வேலை செய்தும்
வட்டிக் குளத்து வரால் மீன் பிடிக்கக்
கரப்புகளும் கட்டி விற்றுக்
காலத்தை ஓட்டும் ஒரு கிழவன்
என்றே நம்மூர் அறியும்
நேற்றுவரை.

பத்துநாள் தொட்டுப்
பகலிரவாய்ப் பாய்மீதில்
வைத்தியமே இன்றி
வயிற்றா லடியோடும்
சத்தி எடுத்தும் வாய்
சன்னீ பிசத்தியும்
செத்தும் பிழைத்தும் கிடந்தீர்
சுவரோரம்.

‘எட்டு நாளாக இரணம் ஏதும்
குடலுக்குட் செல்லவில்லை’
என உருகி உம்மனைவி வள்ளி
புளுங்கல் அரிசவித்த வெந்நீரை
அள்ளி உமக்கு பருக்குகையில்
நீர்-அவளை
ஐம்பது ஆண்டாய்
அனுபவித்துக் கொண்டதற்கும்
ஒன்பது பிள்ளைகளை உற்பவித்து
பெற்றதற்கும்
ஈற்றில் உமக்காய்
ஊற்றை அளைந்ததற்கும்
உம்குறைகள் கேட்டதற்கும் ஈடாக
ஓர் வார்த்தை யேனும் இயம்பாமல்
போய் விட்டீராமே
புலம்புகிறாள் வள்ளியம்மை.

நாய்படாப் பாடுமது
நோயிலவள் பட்டதுண்மை
என்றாலும் ஓர் வகையில்
ஆனந்தம் வள்ளிக்கு
என்ன வென்றால்
தன்புருசன் மானாகப் போடிக்கும்
எத்தனைபேர் சொந்தம் ! அதோ
எக்கவுண்டன் எஞ்சினியர்
வைத்திய கலா நிதிகள்
வர்த்தகர் பேராசிரியர்
சத்தா சமுத்திரந்தான்
சாதிசனம்
என்பதனால்.

தந்தி கிடைத்து
மிகநொந்து பட்டு வந்தார்கள்
அந்தி வரைக்கும் ஏதும்
ஆகாரம் தின்னாமல்
குந்தியிருந்து
குளறி அழுதார்கள்
ஐந்தாறு காரில்
இரவே ஊர்போய் விட்டார்.

எத்தனைபேர் சுற்ற மிந்த
ஏழைக் கிழவனுக்கு
இத்தனை நாள் மட்டுமிது
யாருக்கும் தெரியாது
உண்மையினைக் கண்டெங்கள்
ஊர்-விரலை மூக்கில்வைக்கும்
வண்ணம் மறைவாக வாழ்ந்தீர்
இறவாமல்….

இன்னும் உயிரோடே இருந்தீரே யாமாகில்
என்ன வகையாய் அறிவோம் உறவினரை
செத்தாலும் செத்தீர் நும்
செல்வக் குடும்பத்தைப்
பத்தியமாய்ப் பார்த்திந்தப்
பாரில் வழங்கி வரும்
உண்மை உறவறியூம் ஊர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home