Monday, August 18

துயில்

இந்த உலகில்
இருந்த சில நாழிகையில்
எந்தச் சிறிய உயிரும்
என் ஹிம்சையினால்
நொந்தறியா...
யாருமெனை நொந்ததிலை" என்கின்ற
அந்த இனிய நினைவாம்
அலங்கிர்தத்
தாலாட்டுக் (கு)
என்னிதயம் தந்து
பழம் பிழைந்த
பால் கொஞ்சம் ஊட்டப்பருகி,
அதைத் தொடர்ந்து
கால் நீட்டிப் போர்த்தேன்
என் கம்பளியால்.
தாலாட்டில்...
மாலாகி என்னை
மறந்து துயில்கையில்....
வீண் ஒப்பாரி வைத்திங்(கு)
உலகத்தைக் கூட்டாதே!
அப்பால் நடப்பை அறிவேன்...
அதை ரசிக்க
இப்பயலை மீண்டும்
எழுப்பித் தொலைக்காதே!
தப்பாக எண்ணாதே
தாழ்ப்பாளைப் பூட்டிவிடு!

மேளங்கள் கொட்டி, என்றன்
மேட்டிமையைக் காட்டாதே!
தாளம் மொழிந்து
நடிக்காதே! என் பயண
நீளவழிக்கு, நில
பாவாடை தூவாதே!
ஆழம் அகலம்.....
அளந் தெதுவும் பேசாதே!
மோனத்தில்
உன்னுணர்வை மொண்டு,
இதய நெடும் வானத்தில்
நீ தீட்டி வைத்திருக்கும்
என்னுடைய
தீன உருவை
முழுதும் வழித் தெடுத்து
மீன் விழியில் இட்டு
விளக்கேற்றி
தொட்டிலில் நம்
காவியத்தைப் பாடிக் களி!
பின், இயற்கையொடும்
சாவியலை எள்ளிச் சிரி!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home