Monday, July 28

கவிஞர் நீலாவணன் தொடர்பான மேலதிக வாசிப்புகளுக்கு....

கவிஞர் நீலாவணன் படைத்து வெளிவந்துள்ள 'ஒட்டுறவு'- சிறுகதைகள்,'ஒத்திகை' - கவிதைத்தொகுதி,'வேளாண்மை'- காவியம் என்பவற்றை வாசிக்க வலதுபுறம் உள்ள தொடுப்புகள் மீது சொடுக்குக

(நன்றி: நூலகம்)

2 Comments:

At 9:11 PM , Anonymous Anonymous said...

19. நீலாவணன் நினைவாக

உன்னிடம் வருகையில்
நான் ஒரு சிறுவன்
கண் விடுக்காத பூனைக் குட்டிபோல்
உலகம் அறியா ஒரு பாலகனாய்
உன்னிடம் வந்தேன்.

நீ உன் கவிதை மாளிகை வாசலை
எனது கண் எதிர் திறந்து காட்டினாய்
நீலாவணையின் கடற்கரை மணலில்
நீ உன் கவிதை வீணையை மீட்டினாய்...

ஓ, என் கவிஞனே,
உனது கவிதை மாளிகை வாசலும்
உனது கவிதை வீணையின் நாதமும்
எனது நெஞ்சினை அதிர வைத்தன.
எனது நெஞ்சின் எங்கோ மூலையில்
மூடுண்டிருந்தத கவிதையின் ஊற்று
அந்த அதிர்வினால் திறந்து கொண்டது.
உனது இசையில், என் கவிதையின் ஆன்மா
உயிர்பெற் றெழுந்தது.

ஓ, என் கவிஞனே,
நீயே என்னைக் கவிஞனும் ஆக்கினாய்
நீயே என்னை உயிர்பெறச் செய்தாய்
உன்கவி வனத்தில்
இந்த இளங்குயில்
நீண்ட காலமாய்ப் பாடித்திரிந்தது.

காலம் நமது கவிதை வானிலே
இருண்ட முகில்களைக் கொண்டுவந்தது
காலம் நமது உறவின் பரிதியை
இருண்ட முகில்களால் மூடி மறைத்தது.

ஓ, என் கவிஞனே,
நமது உறவின் பரிதியை மறைத்த
கருமுகில் கும்பலைச் சிதறி அடிக்க
நீ ஏன் உனது சூறாவளியினை
அனுப்பவே இல்லை.
நீயோ உனது சூறாவளியினை
அனுப்பவே இல்லையே.

நமது பாதை பிரிந்தது தோழா
நானோ புதிய செஞ்சூரியனின்
திசையினை நோக்கிப் பயணம் தொடங்கினேன்
நீயும்ஒருநாள் என்னுடன் அந்தத்
திசையினில் வருவாய் என்றும் நம்பினேன்.

ஆ! என் கவிஞனே,
அனைத்தும் முடிந்தது.
நீயோ உனது நெடும் பயணத்தை
எதிர்பாராத வகையிலே இன்று
முடித்துக் கொண்டதாய் தந்தி கிடைத்தது.
துடித்துக் கொண்டதென் நெஞ்சு.

தொலைவிலே, நீலாவணையின்
கடற்கரைக் காற்றில்
ஓயாத உன்கவிதை
ஒலிப்பதனைக் கேட்பேன் நான்.
'மண்ணிடை இரவுக்
கன்னியின் ஆட்சி
இன்னும் தேயவில்லை இளம்
தென்னையின் ஓலைகள்
பண்ணிய இன்பப்
பாட்டுகள் ஓயவில்லை...'

ஓயாத உன்இதயம் ஓய்ந்ததுவாம்
ஆனாலும்
ஓயாத உன்கவிதை
ஒலிப்பதினைக் கேட்பேன் நான்.

உனது சடலம் சிதையிலே எரிவதை
அன்றேல் அதுஓர் குழியுள் புதைவதைக்
காண்பதற்காக நான் வரவில்லை...
இதுவே உனக்குஎன் இறுதி அஞ்சலி.

எனது துயரையும், பெருமூச்சினையும்
உனது நினைவின் சமாதியின் மீது
சமர்ப்பணம் செய்கிறேன்
சாந்திகொள் அன்பனே!

12-01-1975

 
At 9:12 PM , Anonymous Anonymous said...

முதலில் எஸ். பொ. நினைவுகளிலிருந்து ஈழத்து கவிஞர் நீலாவணனின் " முருங்கைக் காய்" என்கின்ற கவிதையை தருகிறேன்.

கனநாள் கழிந்தொரு கவிதை சுரந்தது!
கோப்பியொன் றடித்தேன்;
கொப்பியை விரித்தேன்
கூப்பிட்டாள் இவள்?
ஏனோ? என்றேன்.

கறிக்குப்
புளியம் பழம்போல றால்
வாங்கியிருக்கின்றேன்.
அதற்குள் வைத்துக் குழம்பு வைக்க
முருங்கைக் காய்தான் ருசியாய் இருக்கும்!
ஆதலால்,
அதோநம் வாசல் முருங்கையின்
உச்சிக் கந்தில்...
ஒன்று...இரண்டு....மூன்று,
நீண்டு முற்றிய காய்கள்
ஒருக்கால்...ஏறி
உசுப்பி விடுங்கள்; என்றாள்!

மறுக்கலாம்....
மீண்டும் இரவுகள் வராவேல்!
அதற்காய் இசைந்தேன்;
அவள் விருப்பின்படி
முருங்கையில் ஏறி, முறிந்து
விழுந்தேன்!
" மறுக்கலாம்....
மீண்டும் இரவுகள் வராவேல்!"
முருங்கைக் காயின் பின்விளைவை முன்கூட்டியே கவிஞர் உணர்ந்துதான் இப்படிப் பாடுகிறாரோ?. படிப்போரை இப்படிச் சிந்திக்க வைக்கிற வரிகள் இவை.
பாவம் கவிஞர்! "மனிதன் ஒன்றை நினைக்கத் தெய்வம் வேறொன்றை நினைக்குமாம்" என்பதுபோல் ஆகிவிட்டது. கடைசியில் "முருங்கையில் ஏறி, முறிந்து
விழுந்து" அன்றிரவு படுிக்க வேண்டி வந்துவிட்டதே! அருமையான கவிதை! நான் ஈழத்தில் வாழும் காலத்தில் வாழ்ந்த இந்த கவிஞரை சந்திக்கவில்லையே என்று கவலையாயிருக்கிறது.
மேலும், கவிஞர் கையாண்ட " கோப்பி(காப்பி-தமிழகத்தில்), கொப்பி(பயிற்சிப் புத்தகம்), குழம்பு, உச்சிக் கந்தில், உசுப்பி விடல்" போன்ற சொற்கள் என்னை மீண்டும் ஈழத்திற்கு இழுத்துச் செல்கிறது

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home