காதல்
இளமையெனும் அகல் விளக்கில்
இனியகனா எனுமுயர்ந்த எண்ணெய் வார்த்து
பழமையெனும் திரியிட்டு
பயனூறும் கற்பனையில் படிய வைத்தேன்
அழகெனும் பொருளனைத்தும்
அன்பென்னும் சோதிகலந் தன்பு செய்யும்
எழில் வாழ்வு காண்பதற்கே
எண்ணியெண்ணி ஏங்குகிறேன் எந்த நாளும்!
இருளென்ற கரும்பேடு
இரவெல்லாம் அடைகாத்து ஈன்ற குஞ்சாம்
இரவியெழும் காட்சியிலே
என்னிதயம்பறிகொடுத்து எட்டாவானில்
மருவியவன் தவழ்கையிலே
மணித்தேரை பார்ப்பது போல் மாலை மட்டும்
உருகி நின்றேன்!அவனோ என்
உளத்திலெழும் அன்பலையை உணர்ந்தானில்லை!
காலையிளம் கதிர் கண்டு
காத்துவைத்த நாணமெல்லாம் காற்றில் விட்டுச்
சோலையிலே சிரித்த புது
மலரழகில் உள்ளமெலாம் சொக்கி நின்றேன்!
சேலையெனும் இதழுரிந்து
சிறைவண்டு நறையுண்டு சென்ற பின்னர்
மாலையிலே மடிந்தனவல்
லாலெனது மனமறிந்து பழகக் காணேன்!
பனிமழையின் சிறுதுளிகள்
பட,உலகம் மிகக் களிக்கப் பசும்பொன் பந்தாய்
இனிமை நிலா முழுமை நிலா
எழுந்ததடா என்னுள்ளத்தில், இன்பம் பொங்கி
கனியவரும் அதனுருவி;
களங்கமிக இருந்தாலும் காதலித் தேன்!
அநியாயம்! என்னுடனே
அன்புசெயநிலவுக்கு அறிவே இல்லை!
தூசியின்றித் தெளிந் தோடும்
துறையினிலே நான்மூழ்கத் தொட்ட தேதோ!
பாசியென நினைத்ததனைப்
பறித்தெறிய கையாலே பற்றினேனா?
கூசியங்கு எதிர்த் துறையில்
குளித்த இளங் குமரி எந்தன் கூந்தல் என்றாள்!
ஆசையொடும் நான் பார்த்தேன்
அவளுமெனை நோக்கி நகை அரும்ப நின்றாள்!
காற்றிடையில் குடமேந்திக்
கனியிதழில் கள்ளேந்திக் கண்கள் என்று
கூற்றிரண்டை ஏந்தியிளங்
கொங்கையென நுங்கிரண்டைக் கொடியில் ஏந்தி
ஆற்றோடும் அலைந்தென்னை
அணைந்த கருங்குழலாட அழகுத் திங்கள்
தோற்றோடும் வதனத்தில்
தொடர்ந்தோடும் நகையோடும் தோன்றி னாளை…
கண்ணிமைத்தேன் தலைகவிழ்ந்தாள்
‘கனஅழகுநீ’ என்றேன் கண்ணிரண்டை
மண்ணிடையே புதைத்துவிட்டு
மலர்ப்பதத்தால் தேடுகிறாள் மாயக்காரி!
எண்ணமினி நீயென்றேன்-
எனதுயிர் நீர்என்வாழ்வில் சோதி யூட்டும்
வண்ண விளக் கெனச் செவியில்
வார்த்துவிட்டாள்அமுதத்தை வாழ்க: வாழ்க!
இன்பத்தீ பாவளிநாள்
இன்றெனது வாழ்வினிலே இனிய நன்நாள்!
அன்புத்தீ பரவியிந்த
அகிலமெல்லாம் மகிழ்வெய்தும் அருமை நாளே!
என் வாழ்வின் சோதியினை
ஏற்றி வைத்தாய் இதற்காக எழு பிறப்பும்
உன்திரு நாள் கொண்டாடி
உளமுருகிப் பாடிடுவேன் உண்மையீது!
அன்பெனுமச் செழுங்கழனி
அதில்முளைத்த ஒரு கவிதை அழகு கண்டீர்!
துன்பமெல்லாம் துடைத்தன்புச்
சோதியிலே கலக்கவென்று துடிக்கும் எந்தன்
நண்பர்களே! கேட்டீரா
நானுரைத்த இவைகளிலே நயமிருப்பின்
என்வாழ்வின் சோதியினை
எதுவென்று நீரறிவர்! எதற்கு மேலும்?
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home